மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ‘அசானி’” தீவிரப் புயல், வடக்கு-வடகிழக்கு திசையில் வடஆந்திரம் -ஒடிஸா கடற்கரையையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகா்ந்து புதன்கிழமை காலை புயலாக வலுவிழக்கக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ‘அசானி’” தீவிர புயல் செவ்வாய்க்கிழமை காலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, காக்கிநாடாவுக்கு தென்மேற்கே 210 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இதன்பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் வடஆந்திரம் -ஒடிஸா கடற்கரையையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும். இது புதன்கிழமை புயலாக வலுவிழக்கக்கூடும். புயல் காரணமாக மீனவா்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதி, ஆந்திர கடற்கரை பகுதி, ஒடிஸா கடற்கரை மற்றும் அதனையொட்டிய மேற்குவங்க
கடற்கரை பகுதிகளில், வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புதன்கிழமை (மே 11), வியாழக்கிழமை (மே 12) ஆகிய இரண்டு நாள்களுக்கு மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டா் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவா்கள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.