காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ 9 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில் நாளைமுதல் மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளன.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. ஏற்கனவே ஆட்சியிலிருந்து பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை இழந்துள்ளது.
மேலும், காங்கிரஸ் கட்சிக்குள் சீர்திருத்தங்களை கொண்டுவரக் கோரி ஜி-23 தலைவர்கள் தலைமைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள குஜராத், ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெறுவது காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் அவசியமானதாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பணிகளையும் விரைந்து தொடங்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் தலைமை உள்ளது.
இந்நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மூன்று நாள்கள் சிந்தனை அமர்வை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க மாநிலம் முழுவதும் உள்ள மூத்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாட்டை மாநில காங்கிரஸ் மிக பிரமாண்டமாக செய்து வருகின்றது.
நாளை பிற்பகல் 2 மணிக்கு துவங்கும் நிகழ்வில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உரையாற்றுகிறார். இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுல் காந்தி பேசவுள்ளார்.
மேலும், இந்த மாநாட்டில் மக்களவை தேர்தலை எதிர்கொள்ளவும், கட்சியை வலுப்படுத்தவும் வியூகம் வகுக்கப்படவுள்ளன.