நாட்டில் 6 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரவிட்டுள்ளது.
கோடை காலம் தொடங்கியது முதல் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது.
வடமாநிலங்களான ராஜஸ்தானில் இன்று 119 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் ராஜஸ்தான் மாநிலத்திற்கு 'ரெட் அலர்ட்' எனப்படும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதேபோன்று தில்லிக்கும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேபோன்று ராஜஸ்தான், பிகார், ஒடிசா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. தில்லியில் சராசரியாக 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. இதேபோன்று ஜம்முவில் 43.5 டிகிரி, ஹரியாணாவில் 46.8 டிகிரி, பஞ்சாப்பில் 46 டிகிரி, ராஜஸ்தானில் 48.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது.
அதிகபட்சமாக தில்லியில் உள்ள முன்கேஷ்பூர், நஜாஃப்கார் பகுதிகளில் முறையே 49.2, 49.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.