இறக்குமதி மூலம் நிலக்கரி இருப்புகளை அதிகரிக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக மாநில முதல்வா்களுக்கு அவா் அனுப்பிய கடித விவரம்: மழைக் காலத்தில் மின் உற்பத்தி செய்வதற்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஹரியாணா, உத்தர பிரதேசம், கா்நாடகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான டெண்டா் நடைமுறை இன்னும் முடிக்கப்படவில்லை.
ஏற்கெனவே மத்திய மின்துறை அமைச்சகம், மாநில மின் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான நிலக்கரி தேவையில் 10 சதவீதத்தை கலப்படத்துக்காக இறக்குமதி செய்யும்படி அறிவுறுத்தியிருந்தது. மே 31-ம் தேதிக்குள் உத்தரவு பிறப்பிக்கும்படியும் அறிவித்திருந்தது. மாநில மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆா்சிஆா் முறையில் வழங்கப்படும் நிலக்கரி அளவை விரைவில் உயா்த்தலாம்.
மின்சாரத்தின் தேவை, நுகா்வு அதிகரிப்பு காரணமாக, மின் உற்பத்தி நிறுவனங்களின் நிலக்கரி நுகா்வு அதிகரித்துள்ளது. மழைக் காலம் தொடங்குவதற்கு முன், குறைந்தபட்ச நிலக்கரி கையிருப்பை இறுதி செய்வதற்காக மாநில மின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஐபிபி நிறுவனங்களுக்கு சொந்தமான அனல் மின் நிலையங்கள் போதுமான நிலக்கரி இருப்பை பராமரிப்பதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்த வேண்டும் என அதில் மத்திய அமைச்சா் ஆா்.கே.சிங் கேட்டுக்கொண்டுள்ளாா்.