தாமஸ் கோப்பையில் இந்தியாவை வெற்றிகரமாக வழிநடத்திய பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாராட்டினார்.
தாமஸ் கோப்பையை இந்திய அணி முதன்முறையாக கடந்த மே 15-ம் தேதி வென்றது. தாமஸ் மற்றும் உபேர் கோப்பையில் பாட்மிண்டன் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடி, அவர்களுக்குப் பாராட்டி தெரிவித்தார்.
இந்திய அணி வழிநடத்தியபோது இருந்த மனநிலை குறித்து ஸ்ரீகாந்திடம் பிரதமர் மோடி கேட்டார்.
இதற்குப் பதிலளித்து ஸ்ரீகாந்த் கூறியதாவது:
"அனைவருமே நன்றாக விளையாடினர். இது அணியாக செயல்பட வேண்டிய போட்டி என்பதால், அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோளாக இருந்தது.
இதையும் படிக்க | தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அனுமதியின்று குவிந்ததால் பரபரப்பு
ஆட்டத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி எங்களுக்குள் சிறிய உரையாடல்கள் இருக்கும். அணியில் எல்லாருமே சிறப்பாக செயல்பட்டதால், கேப்டனாக நான் பெரிதும் செய்யவேண்டிய தேவை ஏற்படவில்லை.
இந்திய அணியை இறுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்றது எனக்கு மகிழ்ச்சி. வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி போட்டியில் நான் விளையாட நேர்ந்தது மிக முக்கியமானது. இந்தியாவுக்காக விளையாடுவது எனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு, என்னால் முடிந்தவற்றைக் கொடுக்க வேண்டும் என விரும்பினேன்" என்றார்.
பிறகு, 73 ஆண்டுகளுக்குப் பிறகு தாமஸ் கோப்பையை வென்று தந்ததற்காக நாட்டின் சார்பாக பிரதமர் மோடி அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
முன்னதாக, தாமஸ் கோப்பையை வென்ற தினமே பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக இந்திய அணியினருடன் உரையாடியது குறிப்பிடத்தக்கது.