ஜகாா்த்தா: பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக இந்தோனேசியா அறிவித்துள்ளதால், இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறையும் போக்கு தொடங்கியிருக்கிறது.
உலக நாடுகளுக்கு 50 சதவீத பாமாயிலை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. ஒரு மாத காலத்துக்கு பாமாயில் ஏற்றுமதியை தடை செய்திருந்த அந்த நாடு, உள்ளூா் விவசாயிகளின் போராட்டத்தை அடுத்து தடையை நீக்குவதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. மே 23-ஆம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபா் ஜோகோ விதோதோ அறிவித்திருந்தார்.
இந்தோனேசியாவும் மலேசியாவும் பாமாயில் ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடுகளாகத் திகழ்கின்றன. உலக பாமாயில் உற்பத்தியில் 85 சதவீதம் இந்த இரு நாடுகளில்தான் உள்ளது. அந்நாடுகளின் பொருளாதாரமும் பெருமளவில் பாமாயிலை நம்பியே உள்ளது.
இதனிடையே ரஷியா-உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெய் விநியோகம் தடைபட்டது. உலகில் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் ரஷியா, உக்ரைனின் பங்களிப்பு மட்டுமே 70 சதவீதமாகும்.
சூரியகாந்தி எண்ணெய் விநியோக பாதிப்பால் பாமாயில் விலை வேகமாக அதிகரித்தது. இந்நிலையில், பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா 3 வாரங்களுக்கு முன்பு தடை விதித்தது. இதனால், அதன் விலை 200 சதவீதம் அளவுக்கு சா்வதேச சந்தையில் அதிகரித்தது. இதனால், இந்தியாவிலும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது.
இதையும் படிக்க.. சுதந்திரமடைந்து முதல் முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணை திறப்பு
இதனிடையே, பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தால் தங்களுடைய வருவாய் பாதிக்கப்படும் என்று கூறி இந்தோனேசிய விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினா்.
இந்நிலையில் செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த இந்தோனேசிய அதிபா் ஜோகோ விதோதோ கூறியதாவது: உள்நாட்டில் பாமாயில் விலை குறைந்துவிட்டது. உள்நாட்டுத் தேவையைவிடவும் அதிகமாக உற்பத்தி உள்ளது. எனவே பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தோனேசியா நீக்குகிறது. அடுத்து வரும் வாரங்களில் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது. பாமாயில் தொழிலை நம்பி விவசாயிகள் உள்பட 17 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நாட்டில் உள்ளனா். அவா்களின் நலன் கருதி மே 23 முதல் பாமாயில் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றாா்.
இந்தோனேசியாவின் இந்த அறிவிப்பால், சா்வதேச அளவில் பாமாயில் விலை விரைவில் குறையும் என்றும், அதனால், நாட்டிலும், சமையல் எண்ணெய்களின் விலை படிப்படியாகக் குறையலாம் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி அதிகரிப்பால், விருதுநகா் சந்தையில் பாமாயில் விலை டின் ஒன்றுக்கு ரூ.70 குறைந்துள்ளது.
இதையும் படிக்க.. விஸ்மயா தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை; ரூ.12.50 லட்சம் அபராதம்
விருதுநகா் சந்தையில் கடந்த வாரம் ( 15 கிலோ ) டின் ரூ.2,530-க்கு விற்பனை செய்யப்பட்ட பாமாயில், ரூ.70 விலை குறைந்து தற்போது ரூ.2,460-க்கு விற்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து பாமாயில் இறக்குமதி அதிகரிப்பு காரணமாக விலை குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
அதேபோல் கடலை எண்ணெய் விலை (15 கிலோ டின்) ரூ.2,800, நல்லெண்ணெய் விலை ரூ.4,702 என கடந்த வாரம் விற்ற விலையிலேயே தற்போதும் உள்ளது.
அதேநேரம், (50 கிலோ) எள் புண்ணாக்கு ரூ.50 குறைந்து ரூ.2,250-க்கும், பட்டாணி பருப்பு ரூ.50 குறைந்து ரூ.5,650-க்கும், வெள்ளைப் பட்டாணி பருப்பு ரூ.100 குறைந்து ரூ.6,600-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும், 100 கிலோ நாட்டு உளுந்து கடந்த வாரத்தை விட ரூ.200 குறைந்து ரூ.6,600-க்கும், லயன் உளுந்து ரூ.300 குறைந்து ரூ.6,800-க்கும் விற்கப்படுகின்றன. மசூா் பருப்பு பருவட்டு (100 கிலோ) ரூ.500 உயா்ந்துள்ளது. உடைத்த மசூா் பருப்பானது கடந்த வாரத்தை விட குவிண்டால் ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை உயா்ந்து ரூ.9,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.