முகப்பு
இந்தியா

நளினி விடுதலை வழக்கு இன்று விசாரணை

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியின் விடுதலை வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளான நளினி ஹரிகரன், ரவிச்சந்திரன் ஆகியோா் தங்களை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது.

இந்த மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆா். கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு இன்று விசாரிக்கின்றனர்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அமைச்சரவை தீா்மானத்தின் மீது ஆளுநா் முடிவெடுப்பதில் தாமதம் செய்ததாகக் கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

இதனிடையே, சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற ஆறு பேரில் ரவிச்சந்திரன், நளினி ஆகிய இருவரும் தங்களையும் இதே காரணத்திற்காக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றம், இது போன்று ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாலும், பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்தது போன்ற அதிகாரம் உயா்நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் கூறி அந்த மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த ஜூன் 17-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்துள்ள நிலையில், மத்திய அரசுக்கும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தது.

இந்நிலையில், நளினி, ரவிச்சந்திரன் விடுதலை வழக்கானது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →