பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வருகிற நவ. 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
2016 நவம்பர் 8 ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பயன்பாட்டில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு 2016 முதல் விசாரணையில் இருந்து வருகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்ததுடன், இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய அரசு அறிக்கையை இன்று சமர்ப்பிக்காததால் வழக்கை ஒத்திவைக்கக் கோரிய அரசுத் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, வருகிற நவம்பர் 24 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மனுதாரர்களில் ஒருவருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், அரசியல் சாசன அமர்வு முன்பாக இதுவரை விசாரணை இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டதில்லை என்று கூறினார்.