இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 635 ஆகப் பதிவு!
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 635 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 11 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 635 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 11 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 635 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் கரோனா தொற்று குறைந்து வருகின்றது.
இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,46,67,311 ஆக உள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,30,546 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.79 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7,175 ஆகக் குறைந்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 219.83 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.