மேற்குவங்கத்தில் டெங்கு பாதிப்புக்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கொசுவலையுடன் பாஜகவினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் இதுவரையில் 40 ஆயிரம் பேர் வரையில் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்தாத மேற்குவங்க அரசுக்கு எதிராக பாஜகவினர் இன்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜகவினர் கொசுவலையுடன் பேரணியாகச் சென்றனர். மாநில அரசுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.
இதுகுறித்து சுவேந்து அதிகாரி, 'சட்டப்பேரவைக்கு சுகாதார அமைச்சர் வருவதில்லை. டெங்கு காய்ச்சல் குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினாலும் பதில் இல்லை' என்றார்.
அதுபோல வருகிற டிசம்பரில் மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்காது என்று பாஜக எம்எல்ஏ அக்னிமித்ரா பால் தெரிவித்தார்.