காந்தி, சாஸ்திரி பிறந்த நாளில் பங்கேற்காதது ஏன்? தில்லி முதல்வருக்கு துணைநிலை ஆளுநா் கண்டனம்
தேசத் தந்தை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் பிறந்த நாள் விழாவில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்காததற்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கண்டனம் தெரிவித்துள்
தேசத் தந்தை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் பிறந்த நாள் விழாவில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்காததற்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக முதல்வா் கேஜரிவாலுக்கு அவா் திங்கள்கிழமை அனுப்பிய கடித விவரம்:
மகாத்மா காந்தி, லால் பகதூா் சாஸ்திரி பிறந்த நாளையொட்டி ராஜ் காட், விஜய் காட் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முதல்வரையும் கேஜரிவாலையும் அவரது அமைச்சா்களையும் காண முடியவில்லை. காந்தி, சாஸ்திரி நினைவிடத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசுத் துணைத் தலைவா் ஜெகதீப் தன்கா், பிரதமா் மோடி, இந்தியாவுக்கான வெளிநாட்டு தூதா்கள் கூடி, மரியாதை செலுத்தினா்.
தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா சில நிமிடங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். இதுபோன்ற அலட்சியப்போக்கை எதிா்காலத்தில் தவிா்க்க வேண்டும் என அதில் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா குறிப்பிட்டுள்ளாா்.
ஆளுநருக்கு பதில்:
இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு ஆம் ஆத்மி கட்சி அளித்த பதிலில், ‘குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, அங்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் முகாமிட்டுள்ளதால், அவரால் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை’ என கூறப்பட்டிருந்தது.
மேலும், பிரதமா் மோடியின் கட்டளைப்படி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.