முகப்பு
இந்தியா

‘தேர்தல் நிதி பத்திரங்கள் வெளிப்படையானவை’: மத்திய அரசு

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது வெளிப்படைத்தன்மை வாய்ந்தது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது வெளிப்படைத்தன்மை வாய்ந்தது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது நிறுவனங்கள் நேரடியாக நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை பாஜக தலைமையிலான அரசு கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க விரும்புவோர் உரிய தேர்தல் நிதி பத்திரங்களை வாங்கி அதைக் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதால் நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் அரசியல் கட்சிகளுக்குத் தெரியாது என மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

Advertisement

இந்நிலையில் தேர்தல் நிதி பத்திரத்திற்கு தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணை செய்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தேர்தல் பத்திரங்கள் மூலம் மாநிலத்திலோ அல்லது மத்தியிலோ ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதியளிக்கலாம் என்பதால், இந்த முறையிலான நன்கொடை வழங்குதல் லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்குவதாகவும், இந்த திட்டம் வரம்பற்ற நன்கொடைகளை அரசியல் கட்சிகளுக்கு கிடைக்க வழிசெய்துள்ளதாகவும் வாதிட்டார்.

மேலும் தேர்தலுக்கு முந்தைய காலத்தில் வெளியிடப்படும் தேர்தல் நிதி பத்திரங்கள் ஆளும் கட்சிக்கு நிதி கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகக் குறிப்பிட்டார். 

அதனைத் தொடர்ந்து வாதிட்ட மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா, தேர்தல் பத்திரங்களைப் பெறும் முறை மிகவும் வெளிப்படையானது எனவும் கறுப்புப் பணத்தின் மூலம் அதைப் பெறுவது சாத்தியமற்றது எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில் இந்த வழக்கை மேல் பெஞ்ச் விசாரிக்கக் கோரிய மனு டிசம்பர் 6, 2022 பரிசீலிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக மார்ச் 26, 2021 அன்று விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு, அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக புதிய தேர்தல் பத்திரங்களை வெளியிட தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments