தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் வீட்டில் மர்ம நபர் ஒருவர் புகுந்து அவரின் கார்கள் மற்றும் உடமைகளைத் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி மகளிர் ஆணையத் தலைவராக செயல்பட்டு வருபவர் ஸ்வாதி மாலிவால். இவர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அடக்குமுறைகள், மற்றும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், ஸ்வாதியின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார். இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள ஸ்வாதி மாலிவால்,
ஒரு நபர் என் வீட்டில் புகுந்துள்ளார். அவர் என் அம்மாவின் கார் உள்பட இரு கார்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளார். நான் அப்போது வீட்டில் இல்லை. இருந்திருந்தால், என்ன நேர்ந்திருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளமுடிகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். ஸ்வாதியின் இந்த பதிவு இணையத்தில் பரவலானதைத் தொடர்ந்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இதனைப் பகிர்ந்து சுட்டுரையில் கருத்து பதிவிட்டுள்ளார்.
மகளிர் ஆணையத் தலைவர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பியுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும், ஆளுநர் உடனடியாக தலையிட்டு சரிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.