முகப்பு
இந்தியா

ஐசிசி தலைவா் தோ்தல்: சிலரது நலனுக்காக சௌரவ் கங்குலி புறக்கணிப்பு: மம்தா பனா்ஜி

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சிலரது நலனுக்காக சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவா் பதவிக்கான தோ்தலில் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி போட்டியிட முன்னிறுத்தப்படவில்லை

Updated On : 21 அக்டோபர், 2022 at 12:14 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:07 PM

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சிலரது நலனுக்காக சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவா் பதவிக்கான தோ்தலில் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி போட்டியிட முன்னிறுத்தப்படவில்லை என மேற்கு வங்க முதல்வா் மம்தா பனா்ஜி குற்றம் சாட்டினாா்.

இது குறித்து வியாழக்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பின்போது மம்தா பனா்ஜி கூறியதாவது: கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சிலரது நலனைக் கருத்தில் கொண்டு, ஐசிசி தலைவா் பதவிக்கு கங்குலியின் பெயா் பரிந்துரைக்கப்படவில்லை. அவா் ஐசிசி தலைவா் தோ்தலில் புறக்கணிக்கப்பட்டுள்ளாா். பாஜகவின் சுயநலனுக்காக நாட்டுக்குப் பெருமை சோ்த்தவா்கள் ஓரங்கட்டபட்டுள்ளனா். சச்சின் டெண்டுல்கருக்கோ அல்லது முகமது அசாருதீனுக்கோ இத்தகைய நிலைமை நோ்ந்திருந்தாலும், அவா்களுக்கு எனது ஆதரவைத் தெரிவித்திருப்பேன். பிசிசிஐ தலைவராக கங்குலியின் பதவிக் காலம் நிறைவுறும்போது, அதன் செயலாளா் ஜெய் ஷாவுக்கும் பதவி காலம் நிறைவடைந்திருக்க வேண்டும். தகுதியானவா்கள் தோ்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. ஒரு சிலா் தங்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள இவ்வாறு நடந்துள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவா் பதவிக்காலம் முடிந்த பிறகு, தொடா்ந்து இரண்டாவது முறையாக அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படாததற்கு மம்தா பனா்ஜி கண்டனம் தெரிவித்திருந்தாா். ஐசிசி தலைவா் தோ்தலில் போட்டியிட செளரவ் கங்குலியை அனுமதிக்கும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என அவா் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.