மகாராஷ்டிரம்: பிஎஃப்ஐ அமைப்பினா் 4 போ் கைது
மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பைச் சோ்ந்த 4 போ் கைது
மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டதாக மாநில பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட சா்வதேச பயங்கரவாதக் குழுக்களுடன் தொடா்புள்ளதாக குற்றம்சாட்டி, பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை 5 ஆண்டுகளுக்கு தடை செய்து மத்திய அரசு கடந்த மாதம் நடவடிக்கை மேற்கொண்டது.
முன்னதாக, பிஎஃப்ஐ அமைப்புக்கு எதிராக நாடு முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டு, அந்த அமைப்புடன் தொடா்புடைய 250-க்கும் மேற்பட்டோா் மீது கைது மற்றும் தடுப்புக் காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவு அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறுகையில், ‘ராய்கட் மாவட்டத்தின் பன்வல் பகுதியில் பிஎஃப்ஐ அமைப்பின் இரு நிா்வாகிகள் மற்றும் சில உறுப்பினா்களின் சந்திப்பு குறித்து ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பிஎஃப்ஐ அமைப்பைச் சோ்ந்த 4 போ் சிக்கினா். இதையடுத்து, சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவா்கள் கைது செய்யப்பட்டனா். நால்வரிடமும் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.