மாணவர்களுக்கு நாம் கல்வி கல்வி கற்பிப்பது மட்டுமின்றி வாழ்க்கையிலும் அவர்களை முன்னேற்ற வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியா்களுக்கு மத்திய அரசு சாா்பில் தேசிய நல்லாசிரியா் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படும். இந்த விருது ரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது.
தில்லியில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது பிரதமர் மோடி பேசியதாவது:
புதிய கல்வி கொள்கை உருவாக்குவதில் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றினர். கல்வி சூழலை வலுப்படுத்த இந்தியா சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. மாணவர்களுக்கு நாம் கல்வி கல்வி கற்பிப்பது மட்டுமின்றி வாழ்க்கையிலும் அவர்களை முன்னேற்ற வேண்டும்.
ஆசிரியர்கள் அம்மாக்களுக்கு இணையான இடத்தினை பெறுவார்கள். அவர்களது வாழ்க்கையை பெரும்பாலும் மாணவர்களுடனே செலவிடுகிறார்கள். தாய் பெற்றெடுத்தாலும் ஆசிரியர்களே வாழ்க்கையைத் தருகிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சிறிய வயதில் ஆசிரியர்கள் கூறியவை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்து வரும். ஆசிரியர்கள் ஓய்வு பெருவதேயில்லை. நமக்கு நல்ல விஞ்ஞானிகள், மருத்துவர்கள் கிடைத்திருந்தால் அதற்கு காரணம் நல்ல ஆசிரியர்களே.