ஆன்லைனில் ஆர்டர் செய்தால் மது பாட்டில்கள் வீட்டிற்கே வரும் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குருகிராம் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பிரபல மதுக் கடைகளின் பெயர்கள் இடம் பெற்று ஆன்லைனில் விளம்பரம் ஒன்று வலம் வந்தது. அந்த விளம்பரத்தில் ஆன்லைனில் மது ஆர்டர் செய்பவர்களுக்கு மது பாட்டில்கள் அவர்களது வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி 200 பேருக்கும் மேற்பட்டோர் தங்களது பணத்தினை இழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை தரப்பில் கூறியதாவது: “ இந்த ஆன்லைன் விளம்பரங்கள் வெளியிட்டு மோசடியில் ஈடுபட்டவர் ராஜஸ்தானைச் சேர்ந்த அசாரூதின் கான் (23 வயது) ஆவார். அவர் இந்த விளம்பரங்களை தனது சொந்த மாநிலத்தில் இருந்து வெளியிட்டுள்ளார். அவரது இந்த வியாபாரத்தைப் பெருக்க கூகுள் விளம்பரங்களை பயன்படுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லையில் தடம்புரண்டது
தில்லியில் இருந்து ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நபர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. யூடியூப் விடியோ பார்த்துக் கொண்டிருக்கையில் இந்த விளம்பரம் வந்ததாகவும், அதனை நம்பி பணத்தை ஏமாந்து விட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் ஒரு தொலைபேசி எண் இடம் பெற்றிருந்தாக கூறப்படுகிறது. அந்த எண்ணைத் தொடர்பு கொண்டவுடன் ஒரு க்யூஆர் கோடு வந்துள்ளது. அதனை ஸ்கேன் செய்ததும் ஒரு ஓடிபி வந்துள்ளது. அதனை பகிர்ந்தவுடன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.78,374 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளதாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.” என்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.