பாஜக பிரமுகரும், நடிகையுமான சோனாலி போகட் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பரிந்துரைத்துள்ளார்.
ஹரியாணா பாஜக மூத்த பிரமுகரும் நடிகையுமான சோனாலி போகாட், கோவாவின் அஞ்சுனா பகுதியிலுள்ள கா்லீஸ் விடுதியில் கடந்த 23ஆம் தேதி உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சோனாலி போகாட் பெற்றோர் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சோனாலி போகட் உடன் கோவாவிற்கு வந்த இருவரை சுதீா் சாக்வன், சுக்வீந்தா் சிங்ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிக்க- பொருளாதார நெருக்கடியால் ஆன்லைன் வணிகத்துக்கு மூடுவிழா
விசாரணையில், குடிநீரில் விஷத்தை கலந்து, சோனாலியை குடிக்க வைத்ததாக அவ்விருவரும் ஒப்புக்கொண்டனா் அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், கோவா விடுதி உரிமையாளா், போதைப் பொருள் கடத்தல்காரா் என மேலும் 2 போ் கைது செய்யப்பட்டனர். இதனிடையே இவ்வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சோனாலி போகாட் குடும்பத்தினர் வலியுறுத்தி வந்தனர். மேலும் ஹரியாணா முதல்வரை சந்தித்தும் இதே கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர்.
இந்த நிலையில் சோனாலி போகட் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பரிந்துரைத்துள்ளார். சிபிஐ விசாரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறியுள்ளார். எங்கள் காவல்துறையை நாங்கள் நம்புகிறோம். அவர்கள் நன்றாக விசாரணை செய்கிறார்கள். ஆனால் இது மக்களின் கோரிக்கை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.