கேரளம் மாநிலம், கொச்சியில் தனது 14 ஆவது நாள் நடைப்பயணத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை மேற்கொண்டுள்ள நிலையில், அவரது நடைப்பயணம் 23 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் நிறுத்தம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தில் நிறைவடைந்த நடைப்பயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.
கேரளத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கொச்சி மாவட்டம் கும்பலம் சுங்கச்சாவடி அருகேவுள்ள நாராயண குரு படத்திற்கு புதன்கிழமை காலை 6.25 மணியளவில் மரியாதை செலுத்திய பிறகு இன்றைய நடைப்பயணத்தை தொடர்ந்தார்.
இதையும் படிக்க | தலைவா் தோ்தல் ஒருபக்கம்; நடைப்பயணம் மறுபக்கம்
காலை 11.30 மணிக்கு எடப்பள்ளியில் ஓய்வெடுக்கும் நடைப்பயண குழுவினர், மீண்டும் மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்படுகின்றனர். இரவு 7 மணிக்கு அலுவாவில் இன்றைய பயணத்தை முடிக்கின்றனர்.
இன்றைய பயணத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், சிகிச்சைக்கு பின்னர் நாடு திரும்பியுள்ள காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை பார்ப்பதற்காகவும், கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் வரும் 23 ஆம் தேதி ராகுல் காந்தி தில்லி செல்லவுள்ளதால் அன்று ஒரு நாள் மட்டும் நடைபயணத்தை நிறுத்தவுள்ளதாகவும், மீண்டும் 24 ஆம் தேதி கேரளம் மாநிலம் சாலக்குடியில் இருந்து நடைப்பணத்தை ராகுல் காந்தி தொடங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
அக்டோர் 17 ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு இரண்டு நாள்களில் தொடங்குகிறது. கட்சி தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடப்போவதில்லை என கூறியுள்ளார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக நேரு குடும்பத்தை சாராத ஒருவர் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் இரண்டு பேர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.