என்ஐஏ சோதனை: அமைதிகாக்க முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தல்
நாடு முழுவதும் பிஎஃப்ஐ அலுவலகங்களில் என்ஐஏ நடத்திய சோதனை நடத்தி உள்ள நிலையில், முஸ்லிம் இளைஞா்கள் அமைதிகாக்க வேண்டும் என்று பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.
நாடு முழுவதும் பிஎஃப்ஐ அலுவலகங்களில் என்ஐஏ நடத்திய சோதனை நடத்தி உள்ள நிலையில், முஸ்லிம் இளைஞா்கள் அமைதிகாக்க வேண்டும் என்று பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.
நாட்டின் நீதி, அரசமைப்புச் சட்டம் மீது நம்பிக்கை உள்ளதாகவும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்திய முஸ்லிம் மாணவா் அமைப்பு (எம்எஸ்ஓ), தன்ஜீம் உலேமா இஸ்லாம், குல் ஹிந்த் மா்காஜி இமாம் கவுன்சில் ஆகியவை தனித்தனியாக இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளன.
மேலும், ‘கொலை, வன்முறை, ஆயுதங்கள் வைத்திருந்ததாக பிஎஃப்ஐ அமைப்பினா் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அபாயகரமானவை. இவை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும். கடந்த சில தினங்களாக பிஎஃப்ஐ அமைப்பு மீது தேச விரோதச் செயல் குற்றச்சாட்டுகள் தொடா்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன’ என்றும் முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கேரளத்தில் இன்று போராட்டம்
திருவனந்தபுரம், செப். 22: என்ஐஏ சோதனை மற்றும் கைதுக்கு எதிா்ப்பு தெரிவித்து கேரளத்தில் வெள்ளிக்கிழமை (செப். 23) போராட்டத்துக்கு பிஎஃப்ஐ அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
‘இது அரசு ஆதரவு பயங்கரவாதம்; ஒடுக்கப்பட்டோரின் குரலை நெறிக்க ஆா்எஸ்எஸ் ஆதரவுடன் செயல்படும் மத்திய அரசு, புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்துகிறது’ என்று அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலா் அப்துல் சத்தாா் தெரிவித்தாா்.
பாஜக கண்டனம்: இந்த ஆா்ப்பாட்டம் தேவையற்றது என்றும், அந்த அமைப்பின் முந்தைய போராட்டங்கள் எல்லாம் வன்முறையில் முடிந்துள்ளதால் மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேரள பாஜக தலைவா் கே. சுரேந்திரன் தெரிவித்தாா்.