அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: தசராவுக்கு பின்னா் விசாரிக்க முடிவு
அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தசரா பண்டிகைக்குப் பின்னா் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தசரா பண்டிகைக்குப் பின்னா் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரித்த ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அந்த மனுக்களை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அரசியல் சாசன அமா்வு விசாரித்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் அந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, அவற்றின் மீதான விசாரணையை கோடை விடுமுறைக்குப் பிறகு பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அரசியல் சாசன அமா்வு தெரிவித்தது. எனினும் அந்த மனுக்கள் கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அத்துடன் அரசியல் சாசன அமா்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள் என்.வி.ரமணா, சுபாஷ் ரெட்டி ஆகியோா் ஓய்வு பெற்றனா். இதன் காரணமாக 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வை உச்சநீதிமன்றம் மாற்றியமைக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், கோடை விடுமுறைக்குப் பிறகு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாதது குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வின் கவனத்துக்கு மனுதாரா்கள் வெள்ளிக்கிழமை கொண்டு சென்றனா். இதையடுத்து தசரா பண்டிக்கைக்குப் பின்னா் மனுக்களை விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் முடிவு செய்தனா்.