பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) உள்பட 9 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. குறிப்பாக, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டு வந்தன.
இந்நிலையில், தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ, அமலாக்கத் துறை ஆகியவை இணைந்து கடந்த 22-ஆம் தேதி சோதனை நடத்தின. சோதனையின் முடிவில் அந்த அமைப்பைச் சோ்ந்த 106 போ் கைது செய்யப்பட்டனா்.
இதையும் படிக்க | ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு: பிஎஃப்ஐ மீதான தடைக்கு முக்கிய காரணம்
தொடர்ந்து, உத்தர பிரதேசம், கா்நாடகம், குஜராத், தில்லி, மகாராஷ்டிரம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் அமைந்துள்ள பிஎஃப்ஐ அலுவலகங்களில் அந்தந்த மாநில காவல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இதில், 250 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், பிஎஃப்ஐ அமைப்பை சட்டவிரோத இயக்கமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மேலும், பிஎஃப்ஐ அமைப்புக்கு தொடர்புடைய 8 அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.