ராஜஸ்தான் முதல்வர் பதவியை அசோக் கெலாட் ராஜிநாமா செய்யமாட்டார் என மாநில மூத்த அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் தெரிவித்தார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதால் கட்சியின் விதிப்படி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய சூழல் நிலவுகிறது. மாநில துணை முதல்வராகவுள்ள சச்சின் பைலட் முதல்வர் பதவியை அடைய தீவிரம் காட்டி வருகிறார்.
ஆனால், சச்சின் பைலட் முதல்வாரவதற்கு கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கெலாட்டும் முதல்வர் பதவியை கைவிட மறுத்து வருகிறார். எனினும் கட்சித் தலைமை இதுகுறித்து முடிவெடுக்கட்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | கெலாட் vs பைலட்: ராஜஸ்தானில் என்ன நடக்கிறது? காங்கிரஸுக்குப் பின்னடைவா?
இந்நிலையில், அசோக் கெலாட் இன்று மாலை சோனியா காந்தியை சந்தித்துப் பேசுகிறார்.
இதற்கு முன்னதாக ராஜஸ்தானில் தனது ஆதரவு எம்எல்ஏக்களை கெலாட் சந்தித்துப் பேசியுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் பதவியை கைவிட வாய்ப்பில்லை என்று கூறியதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளார்.
'அசோக் கெலாட்டின் தலைமையில் காங்கிரஸ் செயல்படும். அவர் இன்றும் சரி, எதிர்காலத்திலும் சரி ராஜிநாமா செய்யமாட்டார்' என்று அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் கூறினார்.
கெலாட் ராஜஸ்தானில் தனது ஐந்தாண்டுகளை நிறைவு செய்வார் என மற்றொரு அமைச்சரான விஸ்வேந்திர சிங் தெரிவித்தார்.
ராஜஸ்தான் முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டேன், கட்சித் தலைவர் பதவியிலும் போட்டியிடுவேன் என்ற நிலைப்பாட்டிலேயே கெலாட் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் சோனியா காந்தியுடன் இன்றைய சந்திப்புக்குப் பிறகே முடிவு தெரிய வரும்.
இதையும் படிக்க | காங். தலைவர் போட்டியிலிருந்து விலகுகிறாரா அசோக் கெலாட்?