முகப்பு
இந்தியா

அனுமன் ஜெயந்தி கலவரம்: ஆந்திரத்தில் ஏற்பட்டது ஏன்? காரணம் தெரியுமா?

அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது தில்லியைப்போன்று ஆந்திரத்திலும் கலவரம் ஏற்பட்டது. இருதரப்பினர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

Updated On : 17 ஏப்ரல், 2022 at 6:29 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:30 PM

அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது தில்லியைப்போன்று ஆந்திரத்திலும் கலவரம் ஏற்பட்டது. இருதரப்பினர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது ஹிந்து அமைப்பினரால் ஒலிபரப்பப்பட்ட பாடல் தான் இரு தரப்பினரிடையேயான வன்முறைக்குக் காரணமாக அமைந்ததாக ஆந்திர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

நாடு முழுவதும் ஹிந்துக்களால் நேற்று அனுமன் ஜெயந்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் அனுமன் சிலை வைத்து ஊர்வலம் நடைபெற்றது. 

Advertisement

அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் தில்லியில் இரு மதத்தினரிடையே கலவரம் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 14 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இந்நிலையில், இதுபோன்று ஆந்திரத்திலும் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது, இரு மதத்தினரிடையே கலவரம் ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் கர்னூர் மாவட்டத்திலுள்ள அல்லூர் பகுதியில் நேற்று அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது.

இதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் 15 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக 20 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இந்நிலையில், இந்த கலவரத்துக்கான காரணத்தையும் காவல் துறை விவரித்துள்ளது. அதில், அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது சத்தமாக  பாடல்களை ஒலிபரப்பிய ஹிந்து அமைப்பினர், மசூதியைக் கடக்கும்போதும் பாடல்களின் சத்தத்தை அதிகமாக வைத்து கடந்துள்ளனர். 

ஊர்வலத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், ஒலிப்பெருக்கி சத்தத்தைக் குறைக்க ஹிந்து அமைப்பினரிடம் வலியுறுத்தியும் அவர்கள் மறுத்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

சத்தத்தைக் குறைக்க வலியுறுத்தி மற்றொரு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் ஊர்வலத்தை நடத்தியவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், இரு தரப்பினரிடையே கலவரம் ஏற்பட்டது. இதில் கற்களை வீசி இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டதாக காவல் துறை குறிப்பிட்டுள்ளது. 

இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.