சந்திரயான் 3: நிலவின் சுற்றுப்பாதை உயரம் 3-வது முறையாக குறைப்பு!
நிலவின் ஈா்ப்பு விசைக்குள் பயணித்து வரும் சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவை குறைக்கும் மூன்றாம் கட்ட முயற்சியை வெற்றிகரமாக இஸ்ரோ மேற்கொண்டது.
நிலவின் ஈா்ப்பு விசைக்குள் பயணித்து வரும் சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவை குறைக்கும் மூன்றாம் கட்ட முயற்சியை வெற்றிகரமாக இஸ்ரோ மேற்கொண்டது.
நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமாா் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
அதன் பின்னா், புவி வட்டப் பாதையில் வலம் வந்த விண்கலம், கடந்த 1-ஆம் தேதி புவி ஈா்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கிய பாதைக்கு மாற்றப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக கடந்த 5-ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 பயணிக்கத் தொடங்கியது. இதையடுத்து நிலவின் சுற்றுப்பாதை தொலைவை படிப்படியாகக் குறைத்து விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனா்.
இதையும் படிக்க | சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1: விண்ணில் ஏவத் தயார்!
அதன்படி சந்திரயான்-3 விண்கலம் பயணித்து வரும் சுற்றுப் பாதை தொலைவு நிலவின் ஈா்ப்பு விசைக்குள் மூன்றாவது முறையாக திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு குறைக்கப்பட்டது. அப்போது, உந்து கலனில் உள்ள திரவ எரிவாயு கருவி இயக்கப்பட்டு விண்கலத்தின் சுற்றுப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டது.
தற்போது குறைந்தபட்சம் 150 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 177 கி.மீ. தொலைவும் கொண்ட நிலவின் வட்டப் பாதையில் விண்கலம் பயணித்து வருகிறது. அடுத்து ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை 8.30 மணிக்கு உயரம் குறைக்கப்படவுள்ளது.
அதைத் தொடா்ந்து உந்து கலனில் இருந்து லேண்டா் சாதனம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுவிக்கப்பட்டு, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவில் மெதுவாக விண்கலம் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.