அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றுவதால் நேருவின் பங்களிப்பை மறுத்துவிட முடியாது: காங்கிரஸ்
நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றுவதால் நாட்டிற்கு நேரு அளித்த பங்களிப்பை பிரதமர் மோடி பறித்துவிட முடியாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றுவதால் நாட்டிற்கு நேரு அளித்த பங்களிப்பை பிரதமர் மோடி பறித்துவிட முடியாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம், பிரதமர் நினைவு அருங்காட்சியம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
தில்லியில் தீன் மூர்த்தி பவன் என்ற வரலாற்று கட்டடத்தில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் உள்ளது. ஆங்கிலேய ஆட்சிக்குப் பிறகு இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு இதில் தங்கியிருந்துள்ளார்.
நேரு மறைந்த பிறகு அங்கு ஒரு நூலகமும் விடுதலை போராட்டத்தில், இந்தியாவின் வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பு குறித்த அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டு நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டது.
இந்நிலையில் நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றப்படுவதாக மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. அதன்படி பிரதமர் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என்ற பெயர் ஆகஸ்ட் 14 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இதையும் படிக்க | நீட் தேர்வு: திமுக இளைஞரணி ஆக. 20-ல் உண்ணாவிரதம்
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஜவாஹர்லால் நேருவின் மகத்தான பங்களிப்பை பிரதமர் மோடி ஒருபோதும் பறிக்க முடியாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 'நாட்டின் முக்கிய சின்னம் இன்று புதிய பெயரைப் பெறுகிறது. உலகப் புகழ்பெற்ற நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் பிரதமர்களின் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாறுகிறது. நாட்டின் முதல் பிரதமர் குறித்து மோடிக்கு அச்சம், சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. நேருவையும் நேருவின் பாரம்பரியத்தையும் மறுப்பது, சிதைப்பது, அவதூறு செய்வது, அழிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி செய்வதினால் இந்தியாவுக்கான நேருவின் பங்களிப்பை பறித்துவிட முடியாது' என்று கூறியுள்ளார்.