முகப்பு
இந்தியா

மரண வாக்குமூலத்தை மட்டும் வைத்து தண்டனை வழங்க முடியாது: உச்ச நீதிமன்றம்

மரண வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாக வைத்து, ஒரு நபருக்கு தண்டனை வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:54 AM
பகிர்:

புது தில்லி: மரண வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாக வைத்து, ஒரு நபருக்கு தண்டனை வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மகன் மற்றும் இரண்டு சகோதர்களை எரித்துக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, பலியானவர்கள் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரை, மரண வாக்குமூலத்தின் உண்மைத் தன்மை மீது இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு சாதகமாக்கி, உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, மரண வாக்குமூலத்தில் கூறப்படும் தகவல்களை மிக கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஏனென்றால் இறக்கும் தருவாயில், அவர்களுக்கு வேறு எந்த உள்நோக்கமும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், அவர் மரணிக்கும் போது உண்மையே பேசுவார் என்றும் கருதப்படுகிறது. ஆனால், அந்த மரண வாக்குமூலத்தை இந்த நீதிமன்றம் அப்படியே கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் மரண வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து மட்டும் தண்டனையை வழங்குவது நியாயமாக இருக்காது, சில வழக்குகளில், மரண வாக்குமூலத்துடன், குற்றவாளிக்கு எதிராக மிக உறுதியாக ஆதாரங்கள் இருக்கும். எனவே, மரண வாக்குமூலமும் ஒரு ஆதாரமாகவே கருதப்படும். ஒரு இறுதிக்கட்ட முடிவுக்கு வர  வேண்டும் என்றால், மரண வாக்குமூலத்துடன், உரிய ஆதாரங்களும் காட்டப்பட வேண்டும். இந்த வழக்கில், மரண வாக்குமூலத்தில் கூறப்பட்ட தகவலும், அந்த அறையில் தீ விபத்து நேரிட்ட போது இருந்த சூழலிலும் சில சந்தேகங்கள் இருப்பதையடுத்தே இந்த கருத்து முன்வைக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றவாளி மீது சாட்டப்பட்ட குற்றத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க வேண்டியது அவசியம். எப்போதுமே வழக்கு விசாரணையில் ஏற்படும் சந்தேகப் பலன், குற்றவாளிக்கு சாதகமாகவே இருக்கும். எனவே, மரண வாக்குமூலம் ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒருவருக்கு தண்டைனை வழங்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →