இந்தியா vs பாஜக கூட்டணி: மும்பையில் ஒரேநாளில் இரு தரப்பு கூட்டங்கள்!
இந்தியா கூட்டணியின் 3 ஆவது கூட்டம் நடைபெறும் செப். 1 ஆம் தேதியன்று மகாராஷ்டிர பாஜக கூட்டணியின் கூட்டமும் மும்பையில் நடைபெற உள்ளது.
இந்தியா கூட்டணியின் 3 ஆவது கூட்டம் நடைபெறும் செப். 1 ஆம் தேதியன்று மகாராஷ்டிர பாஜக கூட்டணியின் கூட்டமும் மும்பையில் நடைபெற உள்ளது.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் 'இந்தியா' என்ற கூட்டணியின் பெயரில் ஒன்றிணைந்துள்ளன.
26 எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் கூட்டம் ஜூனில் பிகாா் தலைநகா் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலையில் பெங்களூருவிலும் நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது கூட்டம் மும்பையில் செப்.1 ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி கூட்டணியின் லச்சினை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதேநாளில் மும்பையில் மகாராஷ்டிர பாஜக கூட்டணியின் கூட்டமும் நடைபெற உள்ளது.
இதையும் படிக்க | சீன விவகாரத்தில் ராகுல் காந்தி கூறியது உண்மை: சஞ்சய் ரௌத்
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைத்த நிலையில் சிவசேனை கட்சியில் பிளவு ஏற்பட்டு ஏக்நாத் ஷிண்டே தரப்பு தனியாக பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் இருக்கிறது.
தொடர்ந்து சரத் பவாரின் தேசியவாத கட்சியில் இருந்து அஜித் பவார் விலகி 8 எம்எல்ஏக்களுடன் பாஜகவுடன் இணைந்து தற்போது மகாராஷ்டிர துணை முதல்வராக உள்ளார்.
சரத் பவார், அஜித் பவார் ஆகிய இரு தரப்பும் கட்சி, சின்னம் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. சமீபத்தில் சரத் பவாரை அஜித் பவார் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. கட்சியில் பிளவு ஏற்பட்டுவிடக்கூடாது என இருவரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர பாஜக கூட்டணி கூட்டம் மும்பையில் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக, சிவசேனை(ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் தரப்பு மற்றும் கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் கலந்துகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.