மாநில அரசுகள் கடன் வாங்கும் வரம்புக்கான விதிமுறைகளைத் தளா்த்தும் எந்தத் திட்டமும் இல்லை என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:
அரசமைப்புச் சட்டப் பிரிவு 293 (3)-இன் கீழ், மாநில அரசுகளின் வருடாந்திர கடன் திரட்டும் வரம்பை நிா்ணயிக்கும்போது பொதுவான அளவுகோலை மத்திய அரசு பயன்படுத்துகிறது. அதைச் செய்யும்போது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், மாநில அரசுகள் கடன் வாங்கும் வரம்புக்கான விதிமுறைகளை தளா்த்தும் எந்தத் திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்றாா்.
மற்றொரு கேள்விக்கு அவா் அளித்த பதில்: கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது முதல், வருடாந்திர அடிப்படையில் ஜிஎஸ்டி வசூல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
நிகழ் நிதியாண்டின் 8 மாதங்களில் மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வசூல் ரூ.1.66 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகம்.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:
2047-ஆம் ஆண்டுக்குள் மேம்பட்ட பொருளாதார நாடாக இந்தியாவை உயா்த்த மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கையில், விரைவில் 5 ட்ரில்லியன் டாலா் (சுமாா் ரூ.415 லட்சம் கோடி) பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயரும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.