இந்தியா

பெற்ற குழந்தைகளை மயக்க ஊசி செலுத்திக் கொடூரமாக கொன்ற மருத்துவர்..!

DIN

உத்தரப்பிரதேசத்தில் மருத்துவர் ஒருவர், பெற்ற குழந்தைகளுக்கு மயக்க ஊசி செலுத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் பகுதியைச் சேர்ந்த 45 வயதான அருண் குமார் சிங் என்ற மருத்துவர், அங்குள்ள ரயில்வே மருத்துவமனையில் கண் மருத்துவராக உள்ளார். இவருக்கு அர்ச்சணா என்ற மனைவியும், ஆரவ் என்ற 4 வயது மகனும், அரிபா என்ற 12 வயது மகளும் உள்ளனர். இவர் தனது குடும்பத்தோடு, மருத்துவமனை வளாகத்திலுள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்தநிலையில், கடந்த செவ்வாயன்று இரவு, மருத்துவரின் உறவினர்கள் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோது, அவரையோ அவரது வீட்டிலுள்ள யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, இது குறித்த தகவல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பூட்டப்பட்டிருந்த மருத்துவரின்  வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கே மருத்துவர் மற்றும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் என அனைவரும் இறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதன்பின் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்த மருத்துவர் அருண் குமார் சிங், தொடர்ந்து கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு தற்கொலை செய்துகொள்ளும் விபரீத எண்ணம் மேலோங்கியுள்ளது.  

இதனைத்தொடர்ந்து, சம்பவத்தன்று இரவு, அவர் தனது இரு குழந்தைகளுக்கும் மயக்க ஊசி செலுத்தி, அவர்கள் மயக்க நிலைக்குச் சென்றவுடன், அவர்களை கொடூரமாக தலையில் அடித்துக் கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தனது மனைவியையும் கொலை செய்துவிட்டு, அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, உயிரிழந்த மருத்துவர் குடும்பத்திலுள்ள ஒருவரை கூட, கடந்த ஞாயிறு(டிச.3) முதல் வெளியே காண முடியவில்லை என்று அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டணாய்க்கன் கோட்டையின் சிறப்புகள்...

குட்டீஸ் கவனியுங்க...

தெரியுமா?

2-வது டி20: அயர்லாந்து பேட்டிங்; தொடரைக் கைப்பற்றுமா?

எழுத்தாளர்களின் சிறப்பு...

SCROLL FOR NEXT