புது தில்லி: நாடாளுமன்றத்துக்குள் செல்ல நான்கு கட்ட சோதனைகள் இருக்கும் நிலையில், தடை செய்யப்பட்ட பொருள்களுடன் இருவர் எப்படி நுழைந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்றத்துக்குள் இரண்டு மர்ம நபர்கள் மக்களவைக்குள் அத்துமீறி குதித்து புகைக் குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதுவும், நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்த நினைவு நாளில், எவ்வாறு இப்படி ஒரு பாதுகாப்புக் குறைபாடு நடந்தது என்பதும் கேள்வியாக எழுந்துள்ளது.
முதற்கட்டமாக, இவர்கள் காலணிக்குள் மறைத்து வைத்திருந்த புகைக் குண்டுகளை எடுத்து வீசியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு நபர்களால் மக்களவைக்குள் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
திடிரென இரண்டு பேர் மக்களவைக்குள் குதித்ததைப் பார்த்த மக்களவை உறுப்பினர்கள், துரிதமாக செயல்பட்டு, அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மக்களவையின் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவரும், திடீரென மக்களவைக்குள் குதித்து, சர்வாதிகாரம் கூடாது என்று கோஷம் எழுப்பியதாகவும், வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகைக் கருவியை அவர்கள் கையில் வைத்திருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற வளாகத்துக்குள் செல்ல நுழைவு வாயிலில் முதற்கட்ட சோதனை நடைபெறும். பிறகு, வரவேற்பரையிலேயே பார்வையாளர்களை புகைப்படம் எடுக்கப்பட்டு தனி அடையாள அட்டை வழங்கப்படும். புகைப்படத்துக்கடன் கூடிய அடையாள அட்டை இருக்கிறதா என சோதிக்கப்படும்.
இவ்வாறு, நாடாளுமன்றத்துக்குள் ஒரு பார்வையாளர் நுழைய வேண்டும் என்றால் நான்கு கட்ட பாதுகாப்பு சோதனையை கடக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
அவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் மெட்டல் டிடக்டர், மற்றம் ஸ்கேனர் சோதனை நடத்தப்படும் என்பது கூடுதல் தகவல்.
அவ்வாறு நாடாளுமன்றத்தில் அவைக்குள் பார்வையாளர்களாக நுழைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பரிந்துரை கடிதம் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த பரிசோதனைகளின்போது அந்த கடிதமும் சோதனை செய்யப்படும்.
இரண்டாவதாக நாடாளுமன்றத்தின் வரவேற்பரையில் பார்வையாளராக நுழைபவரின் பெயர், முகவரி, அடையாள அட்டை, எம்.பி.யின் பரிந்துரை கடிதம் அனைத்தும் சரிபார்க்கப்படும்.
பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களவைக்குள் நுழைவதற்கான இடத்தில் மூன்றாம் கட்டமாக சோதனை நடத்தப்பட்டு, நான்காம் கட்டமாக ஒவ்வொரு அவைக்குள்ளும் தனித்தனியாக சோதனை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்து.
இவ்வாறு நான்கு கட்ட சோதனையைத் தாண்டித்தான் ஒருவர் நுழைய முடியும் என்பதால், தடை செய்யப்பட்ட பொருள்களுடன் இருவர், மக்களவைக்குள் எவ்வாறு நுழைந்தனர் என்பது இதுவரை பதில் கிடைக்காத கேள்வியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.