பிகார் மாநிலக் காவல்துறையினர் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிய புதிய தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 4டி இமேஜிங் ரேடார் (4D imaging radar) எனப்படும் புதிய தொழில்நுட்பம் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தைத் திறம்பட கண்காணிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புதிய தொழில்நுட்பம் துல்லியமான தகவல்களைத் தரக்கூடியது. இப்போது பயன்படுத்தப்படும் காணொலி அடிப்படையிலான தொழில்நுட்பங்களை விட அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களை இது துல்லியமாகக் கண்டறியும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகமாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது போக்குவரத்துக் காவல்துறையினரின் வாகனங்களின் மேல் பொருத்தப்படக் கூடியவை.
இதையும் படிக்க: மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது தில்லி உயர் நீதிமன்றம்!
மேலும், வேக அத்துமீறல்கள் மட்டுமின்றி போக்குவரத்து விளக்குகளை மீறுவது, தவறான வழிகளில் செல்வது, இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் பயணிப்பது போன்ற விதிமீறல்களையும் கண்காணித்து வாகனங்களின் எண் பலகைகளை தானாகவே படமெடுக்கும் திறன்கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் பிகார் வழியாக செல்லும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் இந்தத் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படும் என கூடுதல் காவல்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்
மேலும், பிகாரில் ஏற்படும் விபத்துகளில் 44 சதவீத விபத்துகள் நெடுஞ்சாலைகளில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.