திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் 2024 ஜனவரி 1 முதல் 'அமைதியான' விமான நிலையமாக மாற உள்ளதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பயணிகளுக்கு அதிக இரைச்சல் இல்லாத மற்றும் அமைதியான பயண அனுபவம் ஏற்படுத்தி தரப்படும் என்று விமான நிலைய நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமைதியான விமான நிலையம் என்ற முன்னெடுப்பானது, ‘பயணிகள் தங்களின் காத்திருப்பு நேரத்தை இடையூறு இல்லாமல் தங்களுக்குப் பிடித்தமான செயல்களை செய்யும்போது நிதானமான, இரைச்சல் இல்லாத அனுபவத்தை உறுதி செய்வதாகும்‘ என்று திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த முன்னெடுப்பின் ஒருபகுதியாக, பயணிகளுக்கான முக்கியத் தகவல்கள் எதுவும் தவறவிடப்படாமல் இருப்பதற்காக இரண்டு முனையங்களிலும் உள்ள விமானத் தகவல் காட்சித் திரைகளில் விமானங்கள் குறித்த அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படுவது உறுதிசெய்யப்படும்.
அவசரநிலை மற்றும் பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகள் தேவைகளுக்கு ஏற்ப பொது அறிவிப்பு செய்யப்படுவது தொடரும்.
மேலும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தின் இந்த முன்னெடுப்பைப் பற்றி பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.