புது தில்லி: தில்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இயக்கப்படும் விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 100 விமானங்கள் தாமதமாகவும், சில ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை கடும் பனிமூட்டம் காரணமாக, தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களில் குறைந்தது 100 விமானங்கள் தாமதமாக புறப்படும் என்றும், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன், அந்தந்த விமானங்களின் இணையதளங்களில் விமானங்களின் பயண நிலை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு புறப்படுமாறு பயணிகளை விமான நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
இதையும் படிக்க | குஜராத்: மருத்துவ காரணத்துக்காக மது உரிமம் பெறுவோா் 58% அதிகரிப்பு
விமானங்கள் தாமதம் குறித்து அறியாமல் விமான நிலையம் வந்த பயணிகள், விமான நிலையத்திலேயே பல மணி நேரமாக விமான நிறுவனத்தின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.
இதனிடையே, உ.பி. ராம்பூரைச் சேர்ந்த ஃபக்ரூல் கூறுகையில், "நான் ஷார்ஜாவுக்கு விமானத்தில் செல்வதற்காக, கடும் குளிரில் டி-3 இல் 12 மணி நேரமாக காத்திருக்கிறேன். இதுபோன்ற வானிலை காரணமாக விமான பயணத்தில் தாமதம் ஏற்பட்டால் விமான நிறுவனம் பயணிகளுக்கு எந்தவித முன்னேற்பாடும் செய்யவில்லை" என்று குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், விமான முனையத்தின் நுழைவு வாயில்களில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.