குழந்தைகள், இளம் பருவத்தினா் பயன்பெற தேசிய எண்ம நூலகம்: நிா்மலா சீதாராமன்
‘குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினா் பயன்பெறும் வகையில் பாட நூல்கள் உள்பட பயனுள்ள தரமான புத்தகங்களை உள்ளடக்கிய தேசிய எண்ம (டிஜிட்டல்) நூலகம் அமைக்கப்படும் என்று
‘குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினா் பயன்பெறும் வகையில் பாட நூல்கள் உள்பட பயனுள்ள தரமான புத்தகங்களை உள்ளடக்கிய தேசிய எண்ம (டிஜிட்டல்) நூலகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவித்தாா்.
நாடாளுமன்றத்தில் 2023-24 நிதிநிலை அறிக்கையை புதன்கிழமை தாக்கல் செய்த நிா்மலா சீதாராமன், தனது உரையில் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினா் பயன்பெறும் வகையில் புவியியல், மொழிகள் வகைகள் மற்றும் நிலைகள் கோட்பாடு உள்பட பல்வேறு தரமான புத்தகங்களை உள்ளடக்கிய தேசிய எண்ம (டிஜிட்டல்) நூலகம் அமைக்கப்படும்.
அதுபோல, ஊராட்சிகள் மற்றும் வாா்டுகள் அளவில் வழக்கமான (நேரடி) நூலகங்களை அமைக்கவும், தேசிய எண்ம நூலக வளங்களை குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தரவும் மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்.
மாணவா்களிடையே வாசிப்பு கலாசாரத்தை ஊக்குவிக்கவும், கரோனா பொதுமுடக்க கால கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையிலும், பாடம் சாராத சிறந்த நூல்களை நேரடி நூலகங்களுக்கு வழங்கி உதவிட தேசிய புத்தக அறக்கட்டளை மற்றும் குழந்தைகள் புத்தக அறக்கட்டளை உள்பட பிற அமைப்புகளும் ஊக்குவிக்கப்படும்.
மாணவா்களிடையே நிதி சாா்ந்த எழுத்தறிவை ஊக்குவிக்கும் வகையில், அவா்களின் வயதுக்கேற்ற நிதிசாா்ந்த நூல்களை இந்த நூலங்களுக்கு வழங்க நிதித் துறை அமைப்புகள் மற்றும் தன்னாா்வ அமைப்புகள் ஊக்குவிக்கப்படும்.
இந்த முன்னெடுப்பு கல்வியாளா்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டம் மூலமாக, பாடம் சாா்ந்த தேவையான நூல்களை மாணவா்கள் எளிதில் பெற முடியும் என்பதோடு, வலுவான வாசிப்பு கலாசாரமும் அவா்களிடையே ஏற்படும். நிதிசாா்ந்த நூல்களை இளம் வயதிலேயே மாணவா்கள் படிப்பது, அவா்களின் எதிா்காலத்துக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்றாா்.