புணே: நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுத் துறை அமைப்புகளில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்றும், கூட்டுறவு வங்கிகளின் பாதையில் உள்ள தடைகள் நீங்கி, மாவட்ட மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகள் சரியாக செயல்படத் தொடங்கினால், கூட்டுறவுத் துறையின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை குறித்து தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டி பேசினார்.
அப்போது, கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர்ப்புற வங்கிகள் மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம்.
இதையும் படிக்க | சிவசேனை கட்சி பெயர், சின்னத்தைப் பெற ரூ.2000 கோடிக்கு ஒப்பந்தம்: சஞ்சய் ரௌத் குற்றச்சாட்டு!
அதன் அடிப்படையில் கூட்டுறவுத் துறையை மறுசீரமைக்க வேண்டியது உள்ளது. இதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டது.
எனவே கூட்டுறவு வங்கிகள் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
மோடியின் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் செழிப்பு என்ற சூத்திரத்தின்படி எந்த நிறுவனமும் எந்தவிதமான அநீதியையும் சந்திக்காமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும்.
கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான விவசாய நிதியை வழங்குவதற்கான இலக்கை அடைய, நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்களை அமைக்க வேண்டும். அவை புதிதாக தொடங்கப்பட்டு, கூட்டுறவு வங்கிகளின் பாதையில் உள்ள தடைகள் நீங்கி, மாவட்ட மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகள் சரியாக செயல்படத் தொடங்கினால், கூட்டுறவுத் துறையின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று அமித்ஷா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.