பாஜகவின் வெற்றிக்கு திரிணமூல் உதவுகிறது: மேகாலயத்தில் ராகுல் பிரசாரம்
மேகாலயத்தில் பாஜகவை வலுப்படுத்தவும் அக்கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவும் திரிணமூல் காங்கிர உதவுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
மேகாலயத்தில் பாஜகவை வலுப்படுத்தவும் அக்கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவும் திரிணமூல் காங்கிர உதவுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தங்களுக்குதான் அனைத்து விஷயங்களும் தெரியும் என நினைக்கின்றன. அவர்கள் யாரையும் மதிப்பதில்லை. நாம் அனைவரும் இணைந்து அவர்களிடம் மோத வேண்டும்.
மேகாலய மொழி, கலாசாரம், வரலாற்றை பாஜக தாக்க காங்கிரஸ் அனுமதிக்காது. மாநில கலாசாரத்துக்கும் பாரம்பரியத்துக்கும் மரியாதை அளிக்கும் வகையில் பாரம்பரிய ஆடையை அணிந்து வந்துள்ளேன். இந்த ஆடை மூலம் எனது செயல்பாடு பிரதிபலிக்கிறது.
ஆனால், நான் பிரதமர் மோடிபோல மாநிலக் கலாசார ஆடையை அணிந்துகொண்டு உங்களின் மொழி, மதம், கலாசாரம், வரலாற்றைத் தாக்கிப் பேசினால் அது உங்களை இழிவுப்படுத்துவது போலாகும்.
மேற்கு வங்கத்தில் வன்முறைகளும், ஊழல்களும் நிகழும் திரிணமூல் காங்கிரஸின் வரலாற்றை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் கோவாவில் நடைபெற்ற தேர்தலின்போது பல கோடி ரூபாய் செலவழித்தனர். ஆனால், அவர்களின் சிந்தனை பாஜகவுக்கு உதவியாக இருந்தது. அதே சிந்தனையை மேகாலயத்திலும் செய்கின்றனர்.
மேகாலயத்தில் பாஜகவை வலுப்படுத்துவதும் அக்கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதும்தான் அவர்களின் சிந்தனையாகும். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.