தில்லியில் தண்டவாளம் அருகே குறும்படம் எடுத்த இருவர் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் தில்லியில் உள்ள காந்தி நகர் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரண்டு இளைஞர்கள் மொபைல் போனில் குறும்படம் எடுத்திருக்கின்றனர். அப்போது அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரயில் பாதையில் அவர்களது மொபைல்களும் கண்டெடுக்கப்பட்டன. விசாரணையில், பலியானவர்கள் வன்ஷ் ஷர்மா(23), மோனு(20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க- பிகார்: அறுவை சிகிச்சை இல்லாமல் கைதியின் வயிற்றில் இருந்து மொபைல் போனை அகற்றிய மருத்துவர்கள்
இருவரும் தில்லி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இருவரும் மொபைலில் குறும்படங்களை படம்பிடிப்பதற்காக ரயில்வே தண்டவாளத்திற்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் மொபைல்களும் தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டன என்று தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.