ஹிந்தி நடிகர் சோனு சூட், ஓடும் ரயிலில், பயணிகள் ஏறி, இறங்கும் நுழைவாயிலில் உட்கார்ந்தபடி பயணிக்கும் விடியோவை வெளியிட்டிருப்பதற்கு வடக்கு ரயில்வே கடுமையாக விமரிசித்துள்ளது.
ஓடும் ரயிலில் படிகட்டில் அமர்ந்து பயணிப்பது மிகவும் அபாயகரமானது என்று, வடக்கு ரயில்வே, சோனு சூட்டின் விடியோவை டிவிட்டர் பக்கத்தில் இணைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | ஷ்ரத்தா கொலையை நிரூபித்த ஒரு துண்டு எலும்பும் தலைமுடியும்
கடந்த மாதம், தனது டிவிட்டர் பக்கத்தில் ஓடும் ரயிலின் நுழைவாயிலில் அமர்ந்தபடி பயணிக்கும் விடியோவை சோனு சூட் பகிர்ந்திருந்தார்.
இந்த விடியோ குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ள வடக்கு ரயில்வே, பிரியமான சோனு சூட் அவர்களே, இந்த நாடு மட்டுமல்ல உலகின் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் நீங்கள் ஒரு முன்மாதிரியாக (ரோல் மாடலாக) உள்ளீர்கள். ரயில் படிகட்டில் அமர்ந்து பயணிப்பது மிகவும் அபாயகரமானது. இந்த விடியோ மூலம் உங்கள் ரசிகர்களுக்கு ஒரு தவறான தகவலை நீங்கள் அளிப்பது போல் ஆகிவிடும். தயவுகூர்ந்து இதனைச் செய்ய வேண்டாம்.
மிகவும் நிம்மதியான பாதுகாப்பான பயணத்தை அனுபவியுங்கள் என்று பதிவிட்டுள்ளது.
அதேவேளையில், மும்பை ரயில்வே காவல்துறை ஆணையர் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் சினிமாவுக்கு வேண்டுமானால் தேவைப்படும். ஆனால் இயல்பு வாழ்க்கைக்கு தேவைப்படாது. பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். புத்தாண்டு வாழ்த்துகள் என்று பகிர்ந்துள்ளார்.