தமிழக ஆளுநருக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும்
தமிழக ஆளுநருக்கு எதிராக ஒன்றிணைந்து அனைத்துக் கட்சிகளும் போராட முன்வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் டி.ராஜா கூறினார்.
தமிழக ஆளுநருக்கு எதிராக ஒன்றிணைந்து அனைத்துக் கட்சிகளும் போராட முன்வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் டி.ராஜா கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளைக் காணும்போது, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அனைத்துத் தகுதிகளையும் இழந்துவிட்டார். அவர் ராஜிநாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் குடியரசுத் தலைவர் அவரை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்.
பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றான கூட்டாட்சி நெறிமுறைகளைத் தகர்த்து, இந்தியாவை ஒற்றைப் பரிமாண நாடாக மாற்ற ஆர்.எஸ்.எஸ். முயற்சித்து வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில், இன்றைய சூழ்நிலையில் ஆளுநர்கள் தேவையற்றவர்கள் என்கிற அரசியல் தீர்மானத்தை நிறைவேற்றி வெளியிட்டுள்ளோம்.
மேலும், அரசியல் சாசனத்துக்கு புறம்பாக அத்துமீறி செயல்படும் ஆளுநரை திரும்பப் பெறவும், ஆர்எஸ்எஸ் அரசியல் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லும் ஆளுநர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்பதை வலியுறுத்தி டிசம்பர் 29 -இல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம்நடத்தப்பட்டது.
தற்போது தமிழக சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழகத்தில் இருக்கின்ற பல்வேறு அரசியல் தலைவர்கள் அரசியல் சாசனத்தையும், கூட்டாட்சி நெறிமுறைகளையும் காப்பாற்றுவதற்காக பல்வேறு போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தமிழக அரசியல் கட்சிகள் தனித்தனியாகப் போராடுவதற்குப் பதிலாக, அனைத்துக் கட்சிகளும் ஆளுநருக்கு எதிராக ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும்.
மேலும், நாடாளுமன்றம் கூடும்போது மற்ற கட்சிகளின் ஒத்துழைப்போடு இந்த விவகாரம் எழுப்பப்படும் என்றார் டி.ராஜா.
மார்க்சிஸ்ட் அறிக்கை: இதேபோன்று, தமிழக ஆளுநரின் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி மன்றக் குழு செவ்வாய்க்கிழமை கருத்து வெளியிட்டுள்ளது.