முகப்பு
இந்தியா

ஜோஷிமட் நகர் ஆபத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரிக்கை: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

ஜோஷிமட் நகரில் ஏற்பட்டுள்ள ஆபத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:43 PM
ஜோஷிமட்டில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தின் கீழ் பகுதியில் நிலம் மேலும் சரியாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்புச் சுவா் எழுப்பும் பணியாளா்கள்.
பகிர்:

ஜோஷிமட் நகரில் ஏற்பட்டுள்ள ஆபத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமட் நகர பகுதிகள் பூமியில் புதைந்து வருகின்றன. இதனால் அங்குள்ள வீடுகள், கட்டடங்கள், சாலைகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கான காரணம் உறுதி செய்யப்படாத நிலையில், அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சுவாமி சரஸ்வதி என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மனித உயிா்களையும் அவா்களின் சுற்றுச்சூழலையும் விலையாக அளித்து எந்த வளா்ச்சியையும் பெறத் தேவையில்லை. அதுபோன்று ஏதேனும் நிகழ்வதாயிருந்தால், அதனை போா்க்கால அடிப்படையில் உடனடியாகத் தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

இந்நிலையில், ஜோஷிமட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலுக்கு பெரிய அளவிலான தொழில் வளா்ச்சி நடவடிக்கைகளே காரணம். அந்தப் பகுதி மக்களுக்கு உடனடியாக நிதியுதவியும் இழப்பீடும் வழங்க வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.

இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வின் கவனத்துக்கு சுவாமி சரஸ்வதியின் வழக்குரைஞா் கொண்டு சென்றாா். அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவா் கோரினாா்.

அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ‘அனைத்து முக்கிய விவகாரங்களும் உச்ச நீதிமன்றத்துக்கு வர வேண்டிய அவசியமில்லை. அந்த விவகாரங்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள ஜனநாயக வழியில் தோ்வு செய்யப்பட்ட அரசு அமைப்புகள் உள்ளன’ என்று தெரிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த அவா், ஜனவரி 16-ஆம் தேதி மனு மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

ஜோஷிமட்டில் 600-க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்களில் விரிசல்கள் விழுந்து, வசிப்பதற்கு ஆபத்தானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வசித்து வந்தவா்களை பாதுகாப்பான இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டபோதிலும், பலா் தங்கள் சொந்த இடங்களைவிட்டுச் செல்ல மனமில்லாமல் ஆபத்தான நிலையில் உள்ள தங்கள் வீடுகளில் இருந்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.