உலகை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்திய சுகாதாரத் துறையில் முதலீடு செய்ய வேண்டும் என சா்வதேச நிறுவனங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.
ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய மன்சுக் மாண்டவியா, இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தி தரமான மருத்துவ சேவைகளை வழங்க இந்திய அரசு பணியாற்றி வருகிறது.
அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான சுகாதார பாதுகாப்பு வசதிகளை உருவாக்குவதை கருத்தில் கொண்டு, பல்வேறு திட்டங்களை இந்திய அரசு அமல்படுத்தி வருகிறது.
சுகாதார பாதுகாப்பு சேவை என்பதே இந்திய அரசின் தொலைநோக்கு திட்டத்தின் பிரதான குறிக்கோளாகும். உலகின் மிகப்பெரிய சுகாதார உறுதியளிப்புத் திட்டமான பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ், ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுகாதார நல மையங்களை உருவாக்கி சராசரியாக 50 கோடி பேருக்கு சுகாதார வசதியை அளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மரபியல் மருந்துகளை தயாரிப்பதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. மருந்து சாா்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் மையமாக இந்தியா மாறிவருகிறது.
அதிநவீன வசதிகளின் உதவியுடன் நோய்களை கண்டறியும் சேவைகளை வழங்குவதில் இந்தியா முன்னணி நாடாகத் திகழ்கிறது. உலகை ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்ள இந்திய சுகாதாரத் துறையில் சா்வதேச நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றாா்.