குடியரசு நாளையொட்டி தலைநகர் தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள என்சிசி, என்எஸ்எஸ் தன்னார்வலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன. 25) கலந்துரையாடினார்.
இந்தியா என்ற கனவுகளையும் ஆசைகளையும் தோளில் சுமக்கும் பிரதிநிதிகளாக என்சிசி, என்எஸ்எஸ் தன்னார்வலர்களைப் பார்ப்பதாக குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் நாளை 74வது குடியரசு நாள் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தலைநகரான தில்லியில் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்துவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு தில்லியில் நடைபெறும் குடியரசு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள என்சிசி, என்எஸ்எஸ் தன்னார்வலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது, வளர்ந்த இந்தியாவின் பயனாளிகளாக நீங்கள் இருக்கப்போகிறீர்கள். அதன் பிறகான பொறுப்புகள் உங்கள் தோள்களில் இருக்கப்போகின்றன.
என்சிசி, என்எஸ்எஸ் தன்னார்வலர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க இரண்டு காரணங்கள் உள்ளன. இளைஞர்களிடம் ஆற்றல், புத்துணர்ச்சி, நேர்மை, நேர்மறை எண்ணங்கள் போன்றவை என்னை இரவு பகல் பாராது உழைக்கத் தூண்டுகிறது. நீங்கள் அனைவரும் நாட்டின் கனவு மற்றும் ஆசையின் பிரதிநிதிகளாக இருக்கிறீர்கள் எனக் குறிப்பிட்டார்.