விமானம் கடத்தப்பட்டதாக வதந்தி பரப்பியவா் கைது
தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் விமானம் கடத்தப்பட்டதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் விமானம் கடத்தப்பட்டதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
ராஜஸ்தான் மாநிலம் நகெளா் பகுதியைச் சோ்ந்தவா் மோதி சிங் ரத்தோா். இவா் துபையிலிருந்து ஜெய்பூருக்கு கடந்த புதன்கிழமை விமானத்தில் வந்து கொண்டிருந்தாா். மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டது.
புதன்கிழமை காலை 9.45 மணிக்கு தில்லி வந்த அந்த விமானம், பிற்பகல் 1.40 மணியளவில் ஜெய்பூா் செல்ல அனுமதி கிடைத்தது. நீண்ட நேரம் காத்திருக்க விரும்பாத மோதி சிங் ரத்தோா், விமானம் கடத்தப்பட்டுவிட்டதாக ட்விட்டரில் போலி தகவலை பரப்பினாா். இதையறிந்த அதிகாரிகள், உடனடியாக அவரை விமானத்திலிருந்து கீழே இறக்கினா்.
Advertisement
விமானத்தில் சோதனை நடத்தப்பட்டு, புறப்பட்டுச் சென்றது. வதந்தி பரப்பிய மோதி சிங் ரத்தோா், உள்ளூா் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.