முகப்பு
இந்தியா

மோடி ஆட்சியில் ஒவ்வோர் இந்தியரின் கடன் 2.53 மடங்கு அதிகரிப்பு: காங்கிரஸ்

பாஜக அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு இந்தியர் மீதான கடன் ரூ.1.09 லட்சமாக இரண்டரை மடங்கு அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 1:40 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:24 PM


புதுடில்லி: பாஜக அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு இந்தியர் மீதான கடன் ரூ.1.09 லட்சமாக இரண்டரை மடங்கு அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கௌரவ் வல்லப் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று, கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் அரசாங்கத்தின் கடன் அதிகரித்து சாமானிய மக்களை நசுக்கியுள்ளது.

“மோடி அரசு நமது வருங்கால சந்ததியினரை கடனில் புதைத்து வருகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒவ்வொரு இந்தியர் மீதான கடன் ரூ.43,124 இல் இருந்து ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது. 2014 இல் இருந்ததைவிட கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு கடன் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த 9 ஆண்டில் மட்டும் ஒவ்வொரு இந்தியரின் கடன் ரூ.66,249 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

கடந்த 1947 முதல் மார்ச் 31, 2014 ஆம் ஆண்டு வரை இந்திய அரசின் மொத்தக் கடன் ரூ.55.87 லட்சம் கோடியாக இருந்தது.

இது கடந்த 9 ஆண்டில் 2.77 மடங்கு அதிகரித்து ரூ.155.31 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது ஏன்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

"50 சதவீத மக்கள் நாட்டின் மொத்த செல்வத்தில் மூன்று சதவீதத்தை சொந்தமாக வைத்துக்கொண்டு, வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியில் 64 சதவீதத்தை செலுத்தும் நிலையில், கடன் வாங்கிய பணம் ஏன் கே வடிவ மீட்சிக்கு உதவுகிறது?"  என கேள்வி எழுப்பினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் கடன் 83 சதவீதமாக இருந்தது, இது மற்ற வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களை விட சராசரியாக 64.5 சதவீத கடனைக் கொண்டுள்ளது.

ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள செல்வந்தரான ஐந்து சதவீதத்தினர் நாட்டின் செல்வத்தில் 60 சதவீதத்திற்கும் மேல் வைத்திருக்கின்றனர், அதே சமயம் மக்கள்தொகையின் பாதி பேர் (50 சதவீதம்) மூன்று சதவீத செல்வத்தை மட்டுமே பகிர்ந்து கொண்டுள்ளனர் என்று வல்லப் கூறினார்.

மறுபுறம், சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) வசூலிக்கப்பட்ட ரூ.14.83 லட்சம் கோடியில் 64 சதவீதம் மக்கள்தொகையில் கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினரிடம் இருந்து வந்தது என்றும், இதில் 3 சதவீதம் மட்டுமே முதல் 10 சதவீதத்தினரிடம் இருந்து வசூலிக்கப்படுவதாக கூறினார்.

மேலும், 2002 கோத்ரா கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை மத்திய அரசு தடுப்பது குறித்த கேள்விக்கு, “இந்திய அரசாங்கத்தின் ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டார்ட்அப் இந்தியா’ போன்ற ‘பிளாக் இன் இந்தியா’ என்ற திட்டம் உள்ளது. அரசுக்கு எதிராக கேள்விகள் கேட்கப்படுவதை மோடி அரசு விரும்பவில்லை. பிபிசி தலைமையகம் தில்லியில் இருந்திருந்தால், அவர்கள் வீட்டு வாசலில் அமலாக்க இயக்குநரகம் சோதனையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கௌரவ் வல்லப் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.