மும்பையில் கனமழை பெய்து வருவதால் அடுத்த 3 நாள்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மும்பைக்கான இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுவது:
இன்று காலை முதல் மிதமான மழை முதல் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்து வருகின்றது. இதையடுத்து அடுத்த மூன்று நாள்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் எனக் கணித்துள்ளது.
மும்பையின் உயிர்நாடியாகக் கருதப்படும் மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வேயில் செயல்படும் உள்ளூர் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. இருப்பினும் மழை காரணமாக ரயில் சேவைகள் சற்று தாமதமாக இயங்கியது.
தொடர்ந்து பெய்த மழை காரணமாக சில இடங்களில் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏதும் ஏற்படவில்லை.
சியோன், மாதுங்கா குர்லா, செம்பூர், அந்தேரி மற்றும் பரேல் உள்ளிட்ட நகரங்கள் உள்பட பெரும்பாலான பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் மிதமான முதல் கனமான மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.