முகப்பு
இந்தியா

மணிப்பூர் கலவரம்... மத்திய அரசு கோமாவில் உள்ளது: ப.சிதம்பரம் தாக்கு

மணிப்பூரில் பாஜக அரசு வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு கோமாவில் உள்ளது என்று ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். 

Updated On : 23 ஜூலை 2023, 10:05 pm IST
பகிர்:


புதுதில்லி: மணிப்பூரில் பாஜக அரசு வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு கோமாவில் உள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். 

பிகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை ஒப்புக்கொள்வோம். ஆனால், மணிப்பூரில் தொடரும் இடைவிடாத வன்முறைக்கு, பிற மாநில பிரச்னைகளில் இருந்து எப்படி பரிகாரம் தேடிக் கொள்ள முடியும்? அதனை மணிப்பூரின் நிலைமையோடு எப்படி ஒப்பிட முடியும்? அதனை எப்படி மன்னிக்க முடியும்? என சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மணிப்பூர் சமவெளி பகுதிகளில் குக்கிகள் எஞ்சியிருக்கிறார்களா? அல்லது சுராசந்த்பூர் மற்றும் மணிப்பூரின் பிற மலை மாவட்டங்களில் மைதேயி இனத்தவர்கள் மீதி யாராவது இருக்கிறார்களா?

Advertisement

Advertisement

அறிக்கைகள் உண்மையாக இருந்தால், மணிப்பூரில் கிட்டத்தட்ட  இன அழிப்பு நடந்து முடிந்துவிட்டது என தெரிவித்துள்ள சிதம்பரம், முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்களின் ஆணை அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களைத் தாண்டி இயங்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு திறமையற்று மற்றும் ஒருசார்புடன் இயங்குவது மட்டுமல்லாமல், கேவலமான ஒப்பீடுகளை செய்து திரைக்கு பின்னால் ஒளிந்து கொள்வது இரக்கமற்றது மற்றும் கொடூரமானது.

மேலும், பிகார், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தானில் கடுமையான நடவடிக்கை தேவைப்பட்டால், நிச்சயமாக மாநில அரசுகளை கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துங்கள், அதற்காக, மணிப்பூரில் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தை மன்னிக்க முடியாது.

மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு வீழ்ச்சி அடைந்து விட்டது. மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசும் கோமாவில் உள்ளது என சிதம்பரம் கூறியுள்ளார். 

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாத தொடக்கத்தில் கலவரம் மூண்டது. அதன்பிறகு நீடித்து வரும் வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

இந்தச் சூழலில், காங்போக்பி மாவட்டத்தில் கடந்த மே 4-ஆம் தேதி இரண்டு பழங்குடியினப் பெண்கள், மற்றொரு தரப்பு ஆண்களால் ஆடைகள் களையப்பட்டு, ஊா்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்த விடியோ கடந்த புதன்கிழமை வெளியானது.

பி.பைனோம் கிராமத்தில் நிகழ்ந்த இக்கொடூரம், நாட்டையே அதிா்ச்சிக்குள்ளாக்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.