புது தில்லி: மணிப்பூரில் ஆடைகளின்றி இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரண்டு பெண்களுக்கும் நாங்கள் நீதி வழங்குவோம் என்று உச்ச நீதிமன்ற தலைமை அமர்வு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மணிப்பூர் பெண்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை அமர்வு, இத்தகைய கொடுமைகளுக்கு ஆளான பல பெண்கள் இன்னமும் புகார் கொடுக்காமல் இருக்கின்றனர். மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடூரத்தை பரந்த கண்ணோட்டத்துடன் விசாரிக்க வேண்டும் என்றது. மேலும், மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் குறித்து இதுவரை எத்தனை முதல் தகவல்அறிக்கைளை பதிவு செய்துள்ளீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிக்க.. இந்தியா பொருளாதார வல்லரசாவது சாத்தியமா?
ஆடைகள் இன்றி இழுத்துவரப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரண்டு பெண்கள் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறது.
மணிப்பூர் கொடூர சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் தங்களது அடையாளங்களை வெளியிடாமல் பாதுகாக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையை, உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணித்தால், அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார்.