நவி மும்பை: உறங்கிக் கொண்டிருந்த இளைஞரின் கழுத்தில் துருப்பிடித்த கத்தியால் சகோதரர் குத்த, கத்தியை அகற்றாமல் தனது இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்த தேஜாஸ் பட்டீலுக்கு ஒரு பக்கம் அதிர்ஷ்டம் கைகொடுத்தது.
ஜூன் 3ஆம் தேதி, மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில், கழுத்தில் குத்தப்பட்ட கத்தியுடன் வந்தவரைப் பார்த்து முதலில் மிரண்டுதான் போயிருப்பார்கள் ஊழியர்கள்.
உடனடியாக அவரை அறுவைகிசிச்சை அறைக்குக் கொண்டு சென்று 4 மணி நேரம் போராடி, துருப்பிடித்த கத்தியை மருத்துவர்கள் அகற்றினர். கத்தியால் பாதிக்கப்பட்ட ரத்த நாளங்கள் தையல்போட்டு தைத்து, தற்போது அவர் நலமடைந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கழுத்துக் காயம் குறித்து பேசிய மருத்துவர்கள், அதிர்ஷ்டவசமாக, தலை மற்றும் மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் மிக முக்கிய நரம்புகள் எதுவும் கத்திக் குத்துக் காயத்தில் அறுபடவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.
30 வயதாகும் தேஜாஸ் பட்டீலை 28 வயது சகோதரர் குடும்பத் தகராறு காரணமாக கத்தியால் குத்தியிருக்கிறார். எனது சகோதரனே என்னைக் கொலை செய்ய நினைத்தது குறித்து இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளியேற முடியவில்லை என்கிறார் தேஜஸ்.
கழுத்தில் குத்தியிருந்த துருப்பிடித்த கத்தியை அகற்ற மருத்துவர்கள் கடும் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.