எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்கிறாரா மம்தா?
திரிணமூல் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரிணமூல் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024 மக்களவைத் தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் முதன்மை போட்டியாளர்களாக உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் முயன்று வருகிறது.
பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒரு அணியில் திரட்ட முயற்சிகள் நடந்து வரும் சூழலில் ஆம் ஆத்மி, திரிணமூல் கட்சிகள் தனித்து களம் காணும் நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த மாத இறுதியில் திரிணமூல் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தில்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இந்த சந்திப்பில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்திப்பது குறித்து எந்தவித திட்டமிடலும் இல்லை எனவும், இதர எதிர்க்கட்சித் தலைவர்கள் உடன் மட்டுமே சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மம்தாவின் சந்திப்பில் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு எதிராக பிரதமருக்கு கடிதம் எழுதிய சரத்பவார், பரூக் அப்துல்லா, அரவிந்த் கேஜரிவால், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் கட்சி காங்கிரஸ் அல்லாத அணியில் இடம்பெற்று போட்டியிட்ட நிலையில் மம்தாவின் இந்த சந்திப்பு எத்தகைய விளைவு ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.